Tuesday, September 2, 2008

கவிதைப் போட்டி

ஓவியப் போட்டியென்றால் உன்னை வரைந்து அனுப்பலாம்…
இது கவிதை போட்டியாம்!
வெற்றி பெற வேண்டுமென்றால் உன் பெயரைத்தான்
அனுப்ப வேண்டும்…
சிறியதாக இருக்கிறதென்று ஒதுக்கி விட்டால்?
காதலியைப் பற்றிய கவிதை வேண்டுமாம்…

சிலையைப் பற்றியென்றால் சில நொடியில் எழுதுவேன்…
ஓவியம் பற்றியென்றால் ஒரு நொடி போதும்…
கவிதையைப் பற்றியே கவிதை வேண்டுமென்றால் எப்படி?
சரி எழுதுவோம் என்று உட்கார்ந்தால்

கவிதை வளர்கிறதோ இல்லையோ
உன் மேல் காதல் தான் வளர்கிறது!
உன் அழகைச் சொல்ல ஆரம்பித்தால்
பூக்களின் குறிப்பாகி விடுகிறது…

உன் குரலை வருணித்தால்
இசைக் குறிப்பாகி விடுகிறது…

பின் எப்படிதான்
உன்னைப் பற்றி கவிதை எழுதுவதாம்?
என்ன எழுதினாலும், உன்னுடைய
“அச்சச்சோ!”
…க்களுக்கு முன்னால்
என் கவிதைகள் தோற்று விடுகின்றன!
இன்னும் போராடி கவிதையாக,
ஒரு கவிதையெழுதினாலும்
அதை விட கவித்துவமாக நீயே இருக்கிறாய்!
பேசாமல் இந்தக் கவிதைப் போட்டிக்கு

நானனுப்பும் கவிதையாக நீயே போகிறாயா?
வேண்டாம்… வேண்டாம்…
நீ போனால் அப்புறம் அழகிப் போட்டியென்று
நினைத்துக் கொள்ளப் போகிறார்கள்!
கவிதைப் போட்டியோ
அழகிப் போட்டியோ
நீ போனால் பரிசு நிச்சயம்…

No comments: